தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட வணிக அல்லது தொழில் உரிமங்களை வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த உத்தேசித்துள்ளது.சென்னை மாநகராட்சி பெருநகர சென்னை மாநகராட்சி என்று பெயர் மாற்றப்பட வேண்டும். நகராட்சிக்கு சொந்தமான நீர்நிலை எதிலும் படகுகளை பதிவு செய்யாமலும், உரிமம் பெறாமலும் பொழுது போக்கிற்காக படகு சவாரி எதையும் மேற்கொள்ள கூடாது.
இதற்கு குற்றவியல் நடுவர் முன்பு விதிக்கப்படும் தண்டனை அபராதம் என்பது, தண்டனை தொகை என்று மாற்றப்படுகிறது. பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், திறந்த வெளிகளை அதற்கான நோக்கம் தவிர வேறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தக் கூடாது. நகராட்சி முதன்மைச் சட்டத்தின் சில பிரிவில் உள்ள குற்றம் என்பது மீறுதல் என்று மாற்றி அமைக்கப்பட்டு, மீறுதலுக்காக அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.