அகமதாபாத்: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 241 பேரில் 159 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் சென்ற போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஜூன் 12 அன்று மதியம் 1.39 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மோதி நொறுங்கியது. லண்டன் செல்லும் விமானத்தில் 241 பேர் இறந்தாலும், ரமேஷ் என்ற பயணி அதிசயமாக உயிர் தப்பினார்.
மருத்துவக்கல்லூரி மீது விமானம் மோதியதில் அங்கு இருந்த ஐந்து எம்பிபிஎஸ் மாணவர்கள் உட்பட 29 பேர் பலியானார்கள். விமானம் விழுந்து நொறுங்கியதும் பெரும் தீவிபத்து ஏற்பட்டதால், விபத்தில் சிக்கியவர்களின் உடல்கள் அடையாளம் காண இயலாதவகையில் கருகிவிட்டன. எனவே டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டன. விபத்து நடந்து 6 நாட்கள் கழிந்து இதுவரை 184 பேர் சடலங்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் 159 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள உடல்களின் மரபணு சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்டட்டு வருகின்றன என்றும் கூறியுள்ளது.