திருமலை: பேஸ்புக்கில் அறிமுகமான நட்பு காதலாக மாறி விமானத்தில் பறந்து வந்து ஆந்திர இளைஞரை, இலங்கை பெண் கரம்பிடித்தார். இலங்கையை சேர்ந்தவர் விக்னேஸ்வரி. இவர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி.கோட்டா அடுத்த அரிமகுலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன்(கட்டிட மேஸ்திரி) என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக்கில் பழகினர். லட்சுமணனை திருமணம் செய்ய விக்னேஸ்வரி முடிவு செய்தார். இதற்காக சுற்றுலா விசா பெற்று இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
விமான நிலையத்தில் லட்சுமணன், விக்னேஸ்வரியை வரவேற்று தனது வீட்டிற்கு அழைத்து சென்று குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். லட்சுமணன் குடும்பத்தினரும் இவர்கள் காதலை ஏற்று கொண்டனர். இதனை தொடர்ந்து, ஊர்பெரியவர்கள் முன்னிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதேபகுதியில் உள்ள சாய்பாபா கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே, விக்னேஷ்வரியின் விசா ஆகஸ்ட் 6ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே அதற்குள் விக்னேஸ்வரி நாட்டை விட்டு வெளியேறுமாறு போலீசார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும், வெளிநாட்டு இளம்பெண்ணின் திருமணத்தை இலங்கையில் உள்ள விக்னேஸ்வரியின் பெற்றோருக்கு தெரிவித்து சட்டப்பூர்வமாக பதிவு செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.