Tuesday, September 26, 2023
Home » பிள்ளையார்பட்டி சதுர்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: செப்.18ல் தேரோட்டம்

பிள்ளையார்பட்டி சதுர்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: செப்.18ல் தேரோட்டம்

by Suresh

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பகவிநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு இக்கோயிலில் செப்.19ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் கோயிலில் இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

பின்னர் விநாயகர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. கொடிமரத்திற்கு முன் அங்குசத்தேவருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதையொட்டி உற்சவ விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று இரவு மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது.

நாளை (செப்.1) இரவு சிம்ம வாகனத்திலும், செப்.12ம் தேதி இரவு பூத வாகனத்திலும், செப்.13ல் இரவு கமல வாகனத்திலும், செப்.14ல் இரவு ரிஷப வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி வீதியுலா வருகிறார். செப்.15ம் தேதி மாலை 5 மணிக்கு கஜமுக சூரசம்காரம் நடைபெறுகிறது. செப்.16ம் தேதி இரவு மயில் வாகனத்திலும், செப்.17ல் இரவு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி உலா வருகிறார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செப்.18ல் நடக்கிறது. இதையொட்டி அன்று காலை திருத்தேருக்கு கற்பக விநாயகர் சுவாமி எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். மாலை 4 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறுகிறது.

செப்.19ம் தேதி காலை கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொளுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனையும், அன்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?