திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கடற்கரை, நாழிகிணறு, கோயில் வளாகம், ரதவீதிகள், பஸ் நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே தென்பட்டனர். ரதவீதிகளில் பக்தர்கள் மற்றும் அவர்கள் வந்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழநி மலைக்கோயிலுக்கு நேற்று பக்தர்கள் வருகை அதிகளவு இருந்தது.
நேற்று முன்தினம் இரவு முதலே பழநி அடிவார பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள் முழுவதும் புக் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் வந்த வாகனங்கள் சுற்றுலா பஸ் நிலையங்களில் நிறுத்தாமல் கிரிவீதி, அய்யம்புள்ளி சாலை, பூங்கா சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் அடிவார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். அதிக கூட்டத்தின் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறைப்படி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தரிசனத்திற்கு சுமார் 4 மணிநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.