புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பணக்குவியல் பாதி எரிந்த நிலையில் கண்டறியப்பட்டது. இது குறித்து நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு எந்த பணியும் ஒதுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து நீதிபதி யஷ்வந்த் உண்மை தன்மை குறித்த விசாரணைக்காக 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குழுவில் பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சலப்பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் நீதிபதிகள் குழு கடந்த 3ம் தேதி தனது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்தது. இதில் நீதிபதி மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டதாக தெரிகின்றது.
விசாரணை குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி யஷ்வந்த் சர்மா பதவி விலகுமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்து குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்துடன் நீதிபதிகள் குழு சமர்ப்பித்த அறிக்கையில் நகல் மற்றும் கடந்த 6ம் தேதி நீதிபதி யஷ்வந்த் சர்மாவிடம் இருந்து பெறப்பட்ட பதிலின் நகலையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா இணைத்திருக்கிறார்.