Thursday, May 15, 2025
Home செய்திகள் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி பாமகவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு: ஐஜியிடம் உத்தரவாதம் மனு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி பாமகவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு: ஐஜியிடம் உத்தரவாதம் மனு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

by Francis

சென்னை: சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்றுவது குறித்து ஐஜியிடம் பாமக உத்தரவாதம் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை விதித்து உள்ளது. மாமல்லபுரம் அருகே வரும் மே 11ம் தேதி பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு பெருவிழா நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்க கூடாது என்று கோரி வடநெமிலி பஞ்சாயத்து தலைவர் பொன்னுரங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2013ம் ஆண்டு பாமக, வன்னியர் சங்கம் நடத்திய சித்திரை முழு நிலவு திருவிழாவில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சாதி கலவரம் உருவாகி, பட்டியலின மக்கள் தாக்கப்பட்டு, அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வுக்கு பின், சித்திரை முழு நிலவு விழாவுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. எனவே, சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், கடந்த 5 தேதி நிகழ்ச்சிக்கு 42 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஏற்கனவே நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கபட்டுள்ளதால் அனுமதி வழங்க கூடாது என்று உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல், மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் மே 11ம் தேதி பாமக சார்பில் நடத்தப்படும் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி பெரும்புதூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.மாலா மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்துல் முபீன், மாநாடு நடக்கும் நாளில் கிழக்கு கடற்கரை சாலையை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று பா.ம.க. தலைவர் கூறியிருக்கிறார் என தெரிவித்து அன்புமணி பேசிய வீடியோவை நீதிபதிகளிடம் காட்டினார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ெஜனரல் ஜெ.ரவீந்திரன், மாநாட்டுக்கு 47 நிபந்தனைகளுடன் கடந்த 5ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பாமக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, காவல்துறை விதித்துள்ள அத்தனை நிபந்தனைகளும் கண்டிப்புடன் பின்பற்றப்படும். எந்த அசம்பாவித சம்பவங்களுக்கும் இடம் கொடுக்காமல் அமைதியான முறையில் மாநாடு நடத்தப்படும் என்று உறுதியளித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாநாட்டுக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்ற உத்தரவாத மனுவை வடக்கு மண்டல ஐஜியிடம் பாமக தரப்பு வழங்க வேண்டும். மாநாட்டுக்கு வருபவர்கள் எந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் எடுத்து வரக்கூடாது. மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் முறையாக காவல்துறையிடம் அனுமதி பெற்று வர வேண்டும். மாநாட்டின் பாதுகாப்புக்காக அரசு கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும். மாநாடும், சித்ரா பவுர்ணமி விழாவும் அமைதியாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் வடக்கு மண்டல ஐஜி கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் நிபந்தனைகளை விதிக்கலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi