ஊட்டி: கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய குற்றவாளிகள் தரப்பில் கோர்ட்டில் மீண்டும் மனு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதியில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சயான் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளா மாநிலத்தை சேர்ந்த சயான் மற்றும் 10-வது குற்றவாளியான ஜித்தன் ஜாய் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அரசு தரப்பு வழக்கறிஞர்களான ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் சிபிசிஐடி போலீசாரும் ஆஜராகினர்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில், குற்றம் நடைபெற்ற பங்களாவை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஜித்தின்ஜாய் மனு அளித்தார். அந்த மனுவுக்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை எழுத்துப்பூர்வமாக அளிக்கும்படி அரசு தரப்பு வக்கீல்களிடம் நீதிபதி முரளிதரன் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் நடைபெற்ற கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கடந்த 2023ல் சதீஷன், தீபு, சந்தோஷ் சாமி ஆகியோர் மனு அளித்தனர். அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் பங்களாவை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஜித்தின்ஜாய் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.