சென்னை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: மறைந்த தமிழறிஞரும் கவிஞருமான கலைமாமணி கவிக்கோ வா.மு.சேதுராமன் நேற்று முன்தினம் (4ம் தேதி) அகவை மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். இதையடுத்து, அன்னாரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மணிக்கம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், நூறுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட படைப்புகளை தமிழுலகிற்கு அளித்துள்ளவர் வா.மு.சேதுராமன். மேலும், அவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். பெருங்கவிக்கோ என்று அனைவராலும் அறியப்பட்ட மூத்த தமிழறிஞர் கலைமாமணி வா.மு.சேதுராமனை கவுரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.