மதுரை: நடிகர் விஜய் நடிப்பில் வரும் 19-ம் தேதி வெளிவரவுள்ள லியோ படத்தின் பேனர்களை அனுமதியின்றி வைக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுகல் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் வரும் 19-ம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள லியோ திரைப்படத்திற்காக திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு திரையரங்குகள் முன்பு ரசிகர்களால் மிக உயரமான, நீளமான கட்டவுட்டுகள், பிளக்ஸ்கள் வைக்கபட்டுள்ளன. மேலும் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துதல், பயங்கர சப்தத்துடன் பட்டாசு வெடிக்கவும் உள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும் உயிர் பலிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என கூறி இதற்கு தடை விதிக்க வேண்டும் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திரையரங்குகள் முன்பு பேனர் வைக்க எந்த அனுமதியும் கொடுக்கவில்லை என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மனு தாரர் தரப்பில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில், பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பிளக்ஸ், பேனர்கள் உள்ளன என தெரிவிக்கபட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி வழக்கறிஞரை அழைத்து, மாநகராட்சி பகுதியில் ஏதேனும் பிளக்ஸ், பேனர் உள்ளதா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
அப்போது அனுமதியின்றி வைக்கபட்ட பேனர்கள் ஏற்கனவே அகற்றபட்டுவிட்டதாக தெரிவிக்கபட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், அனுமதியின்றி லியோ படத்திற்கு எந்த ஒரு இடத்திலும் பேனர் வைக்க கூடாது என தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்தனர்.