கொடைக்கானல்: கொடைக்கானலில் மோயர் பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டிருந்த யானைக் கூட்டம் இடம் பெயர்ந்ததால், அந்த பகுதிகளுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் மோயர் பாயின்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண்பாறை, 12 மைல் பாய்ண்ட், பேரிஜம் ஏரி, தொப்பி தூக்கும் பாறை, பேரிஜம் ஏரியின் கழுகு பார்வை பகுதி, அமைதிப் பள்ளத்தாக்கு, மதிக்ெகட்டான் சோலை ஆகியவை சுற்றுலாப்பயணிகள் விரும்பிச் செல்லும் இடங்களாகும். இந்த பகுதிகளில் யானைகள் முகாமிட்டால், சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்படும்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி பேரிஜம் ஏரிப்பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டதால் அந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. யானைக் கூட்டம் இடம்பெயர்ந்த பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், பேரிஜம் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த யானைக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு மோயர் பாயின்ட் பகுதியில் முகாமிட்டது. இதனை உறுதி செய்த வனத்துறை அந்த பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், மோயர் பாயின்டில் முகாமிட்டிருந்த யானைக் கூட்டம் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல இன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். யானைகள் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.