கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்து பெரியாறு அணை நீர்மட்டம் மீண்டும் 130 அடியை தாண்டியது. இதனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் குடிநீர், பாசன வசதி பெறுகின்றன. கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த மே 24ல் தொடங்கிய நிலையில், ஜூன் 1ம் தேதியன்று 152 அடி உயரம் உள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியைக் கடந்தது.
இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 1,200 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் நீர்மட்டமும் குறைந்தது. தற்போது நீர்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் மீண்டும் 130 அடியைக் கடந்துள்ளது. தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 1200 கனஅடியில் இருந்து 1,733 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 130.35 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4788.50 கனஅடி. நீர் இருப்பு 4778.90 மில்லியன் கனஅடி. தமிழகப் பகுதிக்கு திறந்த விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1733 கன அடி. இதனால், லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 156 மெகா வாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.