*மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
பெரம்பலூர் : பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் பேரளி கிராம மக்கள், தாங்கள் வாய்க்கால் கரையோரம் அரும்பாடுபட்டு வளர்த்த மரங்களை பாதுகாக்க வேண்டுமென மனு கொடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், பேரளி கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே மாவட்ட கலெக்டர் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 235 மனுக்கள் பெறப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவ ட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சொர்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், ஆதிதிராவிடர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தரராமன், மாவட்ட உள்ளிட்ட அனை த்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேப்பூர் ஒன்றியம் , பேரளி கிராமத்தில் உள்ள ஊர் ஏரிக்கு நடுப்பாதை வாய்க்கால், முனியப்பா ஆலயத்திற்கும் – அய்யனார் ஆலயத்திற்கும் இடையில் உள்ள வாய்க்கால், ஏரிவாய்க்கால் சந்து உள்ளிட்ட 3 வாய்க்கால்கள் வழியே மழை நீர் காடுகளில் இருந்து வருகிறது.
இதில் இரண்டு ஆலயங்களுக்கும் இடையில் உள்ள வாய்க்காலின் இருபக்க கரைகளிலும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே மரக்கன்றுகளை நடவு செய்து அரும்பாடு பட்டு வளர்த்து தற்போது மரங்களாக வளர்ந்துள்ளது. இந்த வாய்க்காலின் வடக்குப் பக்க கரைகளில் மரங்களை ஒட்டியே மின்கம்பங்களை அமைத்து வந்தனர். அப்பொழுதே மரங்களின் நலன்கருதி மரக்கன்றுகளை பாதிக்காதவாறு மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதையும் மீறி வாழ்வு தரும் மரங்களை கருத்தில் கொள்ளாமல் மீண்டும் மின் கம்பங்களை அமைத்துள்ளனர். மின்கம்பம் அமைக்கும்போது சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்றாமல் அப்படியே ஒடித்து வாய்க்காலில் தள்ளப்பட்டுள்ளது.
இதனால் கோடை மழை வந்தால் நீர் ஏரிக்குச் செல்லாமல் கரை உடைக்கும் நிலை உள்ளது. எனவே மரங்கள் மற்றும் நீர்நிலைகளின் நலன் கருதி மரங்களுக்கு அருகே நட்ட மின் கம்பங்களை மாற்றி அமைப்பதுடன், மரங்களை பாதுகாக்க வேண்டும். வாய்க்காலில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.