சென்னை: சனாதன பேச்சு குறித்து என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.வினர் திரித்து அவதூறு பரப்பி வருவது குறித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் ஆங்காங்கே வழக்கு, உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்தும் திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டுக்கு இளைஞர்களை தயார்படுத்தும் வகையில் வருவாய் மாவட்டந்தோறும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது, கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது, மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் அரசின் நலத்திட்ட பணிகள் குறித்து, ஆய்வுக் கூட்டத்தை நடத்துவது ஆகிய மூன்று விஷயங்களை மையமாகக் கொண்டே என் சுற்றுப்பயணங்களை அமைத்துக்கொள்கிறேன்.
இதுவரை 23 மாவட்டங்களில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளோம். அடுத்தடுத்த சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும். இந்த நேரத்தில் சில விஷயங்களை திமுகவினருக்கு தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்’ கடந்த 2ம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்.
‘கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறீர்களே. எங்களின் நலனுக்காகச் செய்த திட்டங்கள் என்ன’ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபாணியாக நிற்கும் ஒன்றிய பாசிச பா.ஜ. அரசைக் கேள்வி கேட்க தொடங்கியுள்ள நிலையில், த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை, ‘இனப்படுகொலை செய்ய தூண்டினேன்’ என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ. தலைவர்கள்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அமித்ஷா போன்ற ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பா.ஜ. ஆளும் மாநில முதலமைச்சர்கள் என யார்யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
தந்தை பெரியாரிடம் இருந்து வந்த பேரறிஞர் அண்ணாவால் நிறுவப்பட்ட தி.மு.க.வின் இரண்டு கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவர். ஆனால், இவை எதையும் புரிந்துகொள்ள விரும்பாமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள ‘மோடி அண்ட் கோ’வை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
ஒரு சாமியார் இடையில் புகுந்து என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். என் தலையைவிட ‘முற்றும் துறந்தவரிடம் எப்படி 10 கோடி’ என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. தவிர பலர் என் மீது நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் புகார் அளித்து வருவதாகத் தெரிகிறது. இந்த நிலையில், ‘கொலை மிரட்டல் விடுத்த அந்த சாமியாரை கைது செய்ய வேண்டும்’ என்று கோரி திமுகவினர்தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். நாம் பிறருக்கு நாகரிகம் கற்றுத் தருபவர்கள். நம் தலைவர்கள் நம்மை அப்படித்தான் வளர்த்தெடுத்துள்ளனர். எனவே, அதுபோன்ற காரியங்களை திமுகவினர் அறவே தவிர்க்க வேண்டும். தவிர, நமக்கு இயக்கப் பணி, மக்கள் பணி என எண்ணிலடங்கா பணிகள் காத்திருக்கின்றன.
கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு அரசின் சார்பிலும், திமுக சார்பிலும் பல பணிகளை நம் முதலமைச்சர்-கழகத் தலைவர் நமக்கு வழங்கியுள்ளார். இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டுக்கான பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் என ஏராளமான பணிகள் நமக்கு முன் உள்ளன. இவ்வளவு வேலைகள் இருக்கும்போது சாமியாரின் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது.. போன்ற, நேரத்தை வீணடிக்கக்கூடிய பணிகளில் திமுகவினர் ஈடுபடக்கூடாது. என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை, திமுக தலைவர் வழிகாட்டுதலுடன், தலைமைக் கழகத்தின் ஆலோசனையைப் பெற்று சட்டத்துறையின் உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.