பெலகாவி: பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானில் 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவரங்களை உலகுக்கு அறிவிக்கும் பொறுப்பை இரண்டு ராணுவ பெண்கள் ஏற்றனர். அதில் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் கர்னல் சோபியா குரேஷி. இவர் தொலைக்காட்சியில் தோன்றியவுடன் அப்பகுதி மக்கள் பெரும் மகிழச்சி அடைந்தனர். உடனே பெலகாவி மாவட்டம் கொன்னூர் கிராமத்தில் உள்ள சோபியா குரேஷி வீட்டுக்கு சென்று அவரது மாமனார் கவுஸ்சாப் பாகேவாடியை சந்தித்து தேசத்துக்கு பெருமை தேடித்தந்தது குறித்து மனதார பாராட்டினர்.
பெலகாயில் வசிக்கும் கவுஸ்சாப் பாகேவாடியின் மகன் தஜூதின் பாகேவாடி. இவரும் ராணுவ அதிகாரியாக ஜான்சியில் வேலைபார்க்கிறார். இவரது மனைவி தான் சோபியா குரேஷி. இவர் ராணுவத்தில் ஏசியான் பிளஸ் படை 18க்கு தலைமை வகிக்கிறார். தற்போது ஜம்முவில் இவர் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிக்க இவரை பாதுகாப்பு துறை நியமித்தது பெருமைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து அவரது மாமனார் பாகேவாடி கூறியதாவது, ‘கர்னல் சோபியா குரேஷி தொலைக்காட்சியில் தோன்றியது முதல் எனது வீடு ரம்ஜான் கொண்டாட்டம் போல் காணப்படுகிறது. எனது மகன், மருமகள் பிள்ளைகள் தொடர்ந்து நாட்டுக்காக பாடுபடுகிறார்கள். அவர்கள் தங்கள் கடமையில் இருந்து தவறமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்றார்.