சென்னை: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் 3.60 லட்சம் பேர் பயணித்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, 20ம் தேதி மற்றும் 21ம் தேதி ஆகிய தேதிகளில் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
இதன்மூலம், 19ம் தேதி 3,43,922 பயணிகளும், 20ம் தேதி இதுவரை இல்லாத அளவில் 3,60,743 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும். இதில் அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 28,021 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 20,423 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 18,375 பயணிகளும், விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 18,113 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட் போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.