Saturday, September 30, 2023
Home » பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நாடே இருக்கிறது மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை: மக்களவையில் பிரதமர் மோடி 2.10 மணி நேரம் பேச்சு

பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நாடே இருக்கிறது மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை: மக்களவையில் பிரதமர் மோடி 2.10 மணி நேரம் பேச்சு

by Karthik Yash

புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, ‘‘மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நாடே இருக்கிறது’’ என்றார். சுமார் 2.10 மணி நேரம் உரையாற்றிய அவர், 90 நிமிடங்கள் வரையிலும் மணிப்பூர் பற்றி எதையும் பேசாததால் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக 26 எதிர்க்கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.

இதில் நேற்று முன்தினம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘மணிப்பூரில் பாரத மாதாவை பாஜ கொன்று விட்டது. நீங்கள் தேச பக்தர்கள் அல்ல, தேச துரோகிகள்’’ என கடும் ஆவேசத்துடன் பேசினார். இதே போல, திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்களையும் மணிப்பூர் நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினர். இரண்டு நாள் விவாதம் முடிந்த நிலையில், விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி நேற்று பேசினார். மக்களவையில் மாலை 5.10 மணிக்கு உரையை துவக்கிய அவர் 2.10 மணி நேரம் பேசினார். இதில் பெரும்பாலான நேரம் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தார். மணிப்பூர் குறித்து சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.

விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது: விவாதத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசியதை எல்லாம் நான் பார்த்தேன். என்ன மாதிரியான விவாதத்தை நீங்கள் செய்தீர்கள். உங்கள் விவாதத்தை பார்த்து உங்களின் மேலிடங்கள் ஏமாற்றமடைந்துள்ளன. இங்கு பீல்டிங் செய்தது எதிர்க்கட்சிகள். ஆனால் சிக்சர்களும், பவுண்டரிகளும் அடித்தது என்னவோ ஆளும் தரப்பு. எதிர்க்கட்சிகள் வீசியது எல்லாமே நோ-பால். அடுத்த முறையாவது நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டு வர வேண்டும். இதே போல 2018ல் கூட எங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்போது கூட நான் கூறியிருந்தேன், இந்த தீர்மானம் அரசுக்கு எதிரானது அல்ல, எதிர்க்கட்சியின் கூட்டணியினரை சோதிக்க கொண்டு வரப்பட்டது என்றேன். அரசு மீது நம்பிக்கை இல்லை என எதிர்க்கட்சிகள் கூறின. அது மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் சென்ற போது, எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை என்று மக்கள் கூறி விட்டனர். 2019 தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்றது. அதே போல, 2024 மக்களவை தேர்தலிலும் பாஜவுக்கு மகத்தான வெற்றிதர மக்கள் முடிவு செய்து விட்டனர்.

மழைக்கால கூட்டத் தொடரின் முக்கியமான எந்த மசோதா மீதும் விவாதம் நடத்த விடாமல் மக்களுக்கு எதிர்க்கட்சிகள் துரோகம் செய்துள்ளன. நாட்டை விட கட்சிதான் பெரிது என அவர்கள் காட்டி உள்ளனர். நாடு உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்களை நீங்கள் ஏமாற்றுகிறீர்கள். மோடிக்கு கல்லறை தோண்டப்படும் என்பது அவர்களுக்கு பிடித்தமான முழக்கம். என்னைப் பொறுத்த வரை அவர்களின் துஷ்பிரயோகம், நாடாளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தைகள் டானிக் போன்றவை. அவர்கள் யாரை எதிர்த்தாலும் அவர்கள் நன்கு செழித்து வளர்வார்கள். அதற்கு நானே சாட்சி.

எதிர்க்கட்சியின் முக்கியமான தலைவர்களுள் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் பெயர் விவாதம் செய்யும் பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனாலும், அமித்ஷா பெருந்தன்மையுடன் அவருக்கு பேச வாய்ப்பளித்தார். காங்கிரசுக்கு என்ன நிர்பந்தமோ தெரியவில்லை. ஒருவேளை மேற்கு வங்கத்தில் இருந்து ஏதேனும் அழைப்பு வந்திருக்கலாம். எங்களின் ஒரே தீர்மானம், இலக்கு எல்லாமே தேசத்தை வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பது மட்டும் தான். இளைஞர்களுக்கு நாங்கள் ஊழல் இல்லாத அரசை தந்துள்ளோம். அவர்கள் இறக்கை கட்டி வானில் பறக்கும் வாய்ப்பை அளித்துள்ளோம். நாட்டின் பெருமையை மீட்டுள்ளோம். புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

உலக அரங்கில் எங்கள் இமேஜை கெடுக்க சிலர் முயற்சித்தனர். ஆனால் உலகம் உண்மையை அறியும். அதை தவறாக வழிநடத்த முடியாது. எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பற்றி தவறான செய்திகளை எதிர்க்கட்சிகள் பரப்பின. நீங்கள் 2028ம் ஆண்டிலும் இதே போன்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவீர்கள். அப்போது இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும். காங்கிரசும் அவர்கள் நண்பர்களும், இந்தியாவை விட அதிகமாக பாகிஸ்தானைதான் நம்புவார்கள். பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளை அனுப்பி எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தினாலும், அவர்கள் மீது அக்கறை கொண்டிருப்பார்கள். நாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தினோம். ஆனால் அதை நம்பாத அவர்கள், பாகிஸ்தான் கூறியதை நம்பினர்.

பெங்களூருவில் நீங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இறுதி சடங்கு நடத்தியதற்காக எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இப்போது, பழைய காரை எலக்ட்ரிக் வாகனமாக்கி புதிய பெயிண்ட் அடித்து புது பெயர் சூட்டி வெற்றிக்கு முயற்சிக்கிறீர்கள். இந்தியா என கூட்டணிக்கு பெயர் சூட்டி நம்பிக்கையை பெற முயற்சிக்கிறீர்கள். காங்கிரசை பொறுத்த வரையில் அதன் கட்சி சின்னம், பெயர் முதற்கொண்டு எதுவுமே அதற்கு சொந்தமில்லை. எல்லாமே மற்றவர்களிடம் இருந்து கடனாக பெற்றதுதான். மூவர்ண கொடி போலவே கட்சிக் கொடியை வைத்துக் கொண்டனர். மகாத்மா காந்தியின் பெயரை திருடிக் கொண்டனர். எனவே இது இந்தியா கூட்டணி அல்ல, தலைக்கனம் மிக்க கூட்டணி. அதில் உள்ள எல்லாருமே கூட்டணிக்கு தலைவராக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

இத்தனை ஆண்டுகாலம் அவர்கள் தோல்வி அடைந்த தயாரிப்பையே அறிமுகப்படுத்தி உள்ளனர். அது எப்போதுமே தோல்வியை மட்டுமே காணும். காங்கிரஸ், ஊழல் கடையையே நடத்தி உள்ளது. அதில், நாட்டை பிரித்தது, எமர்ஜென்சி, அராஜக மற்றும் திருப்திபடுத்தும் அரசியலையே விற்றுள்ளது. எனவே அவர்களின் புதிய கடை விரைவில் மூடப்படும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த போது, பலமுறையும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் பற்றி பேச நினைவுபடுத்தி ‘மணிப்பூர், மணிப்பூர் என தொடர்ந்து கோஷமிட்டனர். ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி பேசவில்லை என்பதால் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதைப் பார்த்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளியேறிய பிறகு மணிப்பூர் பற்றி பேசத் தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: மணிப்பூர் பற்றி பேச வேண்டும் என்றார்கள். ஆனால் அதைப் பற்றி கேட்க பொறுமையில்லாமல் வெளியேறிவிட்டனர். கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே மணிப்பூர் விவகாரத்தில் விவாதிக்க தயார் என நாங்கள் கூறிக் கொண்டிருக்கிறோம். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று (நேற்று முன்தினம்) மணிப்பூர் தொடர்பான கேள்விகளுக்கு நீண்ட விளக்கம் அளித்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகளை பொறுத்த வரையில் இந்த விஷயத்தில் அரசியல் செய்வது மட்டுமே நோக்கம்.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்கள் நடந்துள்ளன. குற்றவாளிகளை தண்டிக்க ஒன்றிய, மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளை எடுத்து வருகின்றன. எந்த ஒரு குற்றவாளியும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என உறுதி அளிக்கிறேன். ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்கள் பக்கம் துணை நிற்கிறது. இந்த அவையும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறது. மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும், நாங்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்து சரியான தீர்வு காண்போம் என மணிப்பூர் மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன்.

இங்குள்ள சிலர் பாரத மாதாவின் மரணத்திற்கு ஆசைப்படுகின்றனர். அவர்களால் எப்படி இது முடிகிறது. பாரத மாதாவை அவமதிப்பதே காங்கிரசின் வரலாறு. வடகிழக்கு மாநில மக்களின் நம்பிக்கையை அவர்கள் கொலை செய்தனர். ஒவ்வொரு முறையும் அவர்களை காயப்படுத்தினர். வடகிழக்கு மாநில பிரச்னையின் ஆணிவேரே காங்கிரசும் அதன் அரசியலும்தான். அதன் பாதிப்புதான் மணிப்பூர் இனக்கலவரம். பாஜ அரசு வடகிழக்கு மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது. மணிப்பூரில் நடந்த சம்பவங்கள் மிகுந்த வலியை தருகின்றன. அதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

* நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
பிரதமரின் பதிலுரைக்கு பின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானம் தோல்வி அடைந்தது. ஏற்கனவே வெளிநடப்பு செய்துவிட்டதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் அப்போது அவையில் இல்லை. கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?