திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பொதுப்பிரச்னை தொடர்பாக 165 கோரிக்கை மனுக்களை கலெக்டர் த.பிரபுசங்கர் பெற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்யவும், பொதுப்பிரச்னைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் அளித்த கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். அப்போது, நிலம் சம்பந்தமாக 68 மனுக்களும், சமூக பாதுகாப்புதிட்டம் தெடர்பாக 16 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 9 மனுக்களும், பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 45 மனுக்களும் இதர துறைகள் தொடர்பாக 27 மனுக்களும் என மொத்தம் 165 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அவர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், பொன்னேரி சப் கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வெங்கட்ராமன் (பொது), சத்தியபிரசாத் (தேர்தல்), தனித்துணை கலெக்டர் (சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.