சென்னை: மாற்றுத்திறனாளிகள் அணியின் புதிய நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை திமுக மாற்றுத்திறனாளிகள் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் டி.எம்.என்.தீபக் மற்றும் அணித் தலைவராக நியமிக்கப்பட்ட ரெ.தங்கம் ஆகியோர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உடனிருந்தனர்.
நிகழ்வின் தொடர்ச்சியாக, பேராசிரியர் டி.எம்.என்.தீபக் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் மற்றும் டிசம்பர்-3 இயக்க நிர்வாகிகளான துணைத் தலைவர் மோகன்ராஜ், செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர், உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கியதற்காகவும் மாற்றுத்திறனாளிகள் மேன்மையுற பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.