Wednesday, June 18, 2025
Home செய்திகள் விபத்தில் காயம் அடைந்த நபர்களை ஏற்றிச்செல்ல ஆம்புலன்ஸ் வராததால் மக்கள் சாலை மறியல்

விபத்தில் காயம் அடைந்த நபர்களை ஏற்றிச்செல்ல ஆம்புலன்ஸ் வராததால் மக்கள் சாலை மறியல்

by Lakshmipathi

*திருபுவனையில் பரபரப்பு

திருபுவனை : விபத்தில் காயம் அடைந்த நபர்களை ஏற்றிச்செல்ல ஆம்புலன்ஸ் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் திருபுவனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருபுவனை துணை மின்நிலையம் எதிரே விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் நேற்று காலை இந்திராநகரை சேர்ந்த ஜான் பி (44) என்பவர், சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியது.

இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். 2 பேரையும் மீட்பதற்காக ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் தனியார் வாகனத்தில் ஏற்றி மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஜிப்மரில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்து அரை மணி நேரத்துக்கு மேலாக ஆம்புலன்ஸ் வராததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் காரணமாக விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்குவழி சாலையில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருபுவனை போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், ஆம்புலன்ஸ்களை உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்துக்கு விரைவாக அனுப்பி வைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi