சென்னை: சென்னை கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை காணாமல் போன விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கூடாது என்று ரங்கராஜன் நரசிம்மனுக்கு தடை விதித்து 2022 செப்டம்பர் 2ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விரும்பதகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக கூறி ரங்கராஜன் நரசிம்மன் மீது தொழிலதிபர் வேணு சீனிவாசன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். மனுவில், இந்த வழக்கில் ரங்கராஜன் மன்னிப்பு கோரினார். இதை மற்றொரு வலைத்தளமான எக்ஸ் வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் கண்ணியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் ரங்கராஜன் நரசிம்மன் பதிவிட்டுள்ளார். எனவே, அவருக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த தொகையை 4 வாரங்களில் அவர் செலுத்த வேண்டும். மேலும், பாலியல் தொழிலாளர்களை குறிப்பிட கூடிய வார்த்தையை பயன்படுத்தியது ஆட்சேபத்துக்குரியது. சனாதனத்தின் பாதுகாவலர் என்று கூறிக்கொள்ளும் நபர் சமூக வலைத்தளங்களில் விரும்பத்தகாத வார்த்தைகளை பயன்படுத்த கூடாது. அதை ஊக்குவிக்க முடியாது. இளைஞர்கள், வயதானவர்கள் என்று அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் நாகரிகத்தையும், கண்ணியத்தையும் பேண வேண்டிய அவசியத்தை உணர்த்த இரண்டு வாரங்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.