வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசை 4 அல்லது 5 முறை தான் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறி வருகிறார். ஆனால், பாகிஸ்தானுடனான போரை நிறுத்தியதில் மூன்றாம் நபரின் தலையீடு இல்லை என்று இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. அதேநேரத்தில் போரை நிறுத்தியதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பாகிஸ்தான் தரப்பு நன்றி தெரிவித்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இடையேயான போரை நிறுத்த உதவிய தனக்கு நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என கூறி ஆதங்கப்பட்டு இருக்கிறார் டிரம்ப். இது தொடர்பாக ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கூறியதாவது; காங்கோ ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில் இருநாட்டு தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாஷிங்டன் வருகிறார்கள். ஆப்பிரிக்காவுக்கும் உலகிற்கும் இது ஒரு சிறந்த நாள். இதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போரை நிறுத்தியதால் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. செர்பியா – கொசோவோ, எகிப்து – எத்தியோப்பியா நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தியதால் எனக்கு போர் நோபல் பரிசு கிடைக்காது. மத்திய கிழக்கு ஒப்பந்தங்களை மேற்கொண்ட எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. ரஷ்யா- உக்ரைன், இஸ்ரேல்-ஈரான் உள்பட நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. பல நாடுகள் இடையே பதற்றத்தை தணிக்க உதவிய எனக்கு 5 முறை நோபல் பரிசு வழங்கியிருக்க வேண்டும் என்றும், அதன் விளைவுகள் என்ன இருந்தாலும் என்னுடைய பணி குறித்து மக்களுக்கு தெரியும். அதுவே எனக்கு முக்கியம் என கூறியுள்ளார்.