Monday, June 23, 2025
Home செய்திகள்Showinpage தேனிமலை முருகன்கோயிலுக்கு செல்ல 7 கி.மீ. தூரத்திற்கு ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைப்பு

தேனிமலை முருகன்கோயிலுக்கு செல்ல 7 கி.மீ. தூரத்திற்கு ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைப்பு

by Neethimaan

* புதுகை-பொன்னமராவதி சாலையிலிருந்து எளிதில் செல்லலாம்
* கிராம மக்கள் பங்களித்து ஏற்பாடு

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை முருகன் கோயில் முன்பு பொதுமக்கள் நன்கொடை மூலம் ரூ.9.50 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது தேனிமலை பசுமை நிறைந்த மலை கிராமம். இந்த ஊருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அங்கிருக்கும் தேன் கூடுகளைக் கொண்ட மலையில் அழகுற அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோயில். மலையின் உச்சியில் உள்ள பெரிய தேன்கூடுகளில் கிராம மக்கள் தேனெடுப்பதோ, சேதம் ஏற்படுத்துவதோ இல்லை. மாறாக அது வழிபாட்டுக்கு உரியதாகவும், விவசாயிகளின் நம்பிக்கைக்கான சின்னமாகவும் இருந்து வருகிறது. அதன்படி, இந்த மலையில் மூன்று பெரிய தேன் கூடுகளை கட்டியிருந்தால் அந்த வருடம் விவசாயம் சிறப்பாக இருக்கும் என்றும், இரண்டு கூடுகளைக் கட்டியிருந்தால் விளைச்சல் சுமாரக இருக்கும் என்றும், ஒரே ஒரு கூடு மட்டும் கட்டியிருந்தால் போதிய விளைச்சல் இருக்காது என்றும் நம்புகின்றனர்.

அதன்படி, தேனீக்கள், தேன் கூடுகள், தேன்கூடு அமைந்திருக்கும் மலை ஆகியன இவ்வூர் மக்களின் வாழ்வோடும், உணர்வோடும் கலந்திருக்கின்றன. சிறப்பு வாய்ந்த தேன்மலையில் 200 படிகளை அமைத்து, உச்சியில் சுப்பிரமணியசுவாமிக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கே சித்தர்கள் பலர் தங்கி இருந்து முருகனின் அருளைப் பெற்று, முக்தி அடைந்ததாகவும், அந்த சித்தர்கள் இன்றும் முருகனை தரிசித்து வருவதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. இங்கே பெருமானந்த சுவாமி என்ற சித்தரின் ஜீவ சமாதி இருக்கிறது. மலை அடிவாரம் அருகில் நீண்ட காலம் தங்கியிருந்து முருகனை வழிபட்டதாகவும், மக்களுக்கு அபிஷேகம் தீர்த்தம் வழங்கி நோய் தீர்க்க உதவி புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. புதுக்கோட்டை மன்னர் வனப்பகுதிக்கு வேட்டையாட சென்றபோது, மன்னருக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது.

வலியால் துடித்த அவருக்கு வைத்தியம் பார்க்க வைத்தியர் யாரேனும் இருக்கிறார்களா? என்று உடன் வந்தவர்கள் தேடினர். அப்போது அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம், இது குறித்து கேட்டபோது, இங்கு வைத்தியர் யாரும் இல்லை ஆனால் மருந்து இருக்கிறது என்று கூறினான். பின்னர், அருகில் இருக்கும் தேனி மலையை சுட்டிக்காட்டி, முருகன் அருள்புரியும் அந்த மலையில் இருக்கும் சுனை நீரை கொண்டு வந்து மன்னருக்கு கொடுத்தால் வயிற்று வலி நீங்கும் என கூறினான். அவ்வாறே செய்ய மன்னருக்கு வலி நீங்கியது. அதன் பின்னர் மன்னரின் ஆணைப்படி தேனிமலை முருகன் ஆலயம் கட்டப்பட்டது என்று கூறுகின்றனர். மலை உச்சியில் உள்ள கோயிலுக்கு செல்ல படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலேவுள்ள கோயிலின் மகாமண்டபத்தில் மயில் வாகனமும், அர்த்த மண்டபத்தில், விநாயகர், சிவன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நந்தி மற்றும் நாகரும், கருவறையில் அமர்ந்த கோலத்தில் வள்ளி தெய்வானையுன் சுப்பிரமணிய சுவாமி கருணையின் வடிவாய் காட்சியளிக்கிறார்.

நோய்கள் நீங்கவும், மனக்குறைகள் விலகவும் இங்கே வழிபடுதல் சிறந்தது என்கின்றனர் மக்கள். இதனால், பொன்னமராவதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால், மலைக்கோயிலுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் இருந்ததால், பொதுமக்கள் ரூ.9.50 லட்சம் நன்கொடை அளித்து, பேவர் பிளாக் அமைத்துள்ளனர். இதனால், பொதுமக்கள் கோயிலுக்கு சிரமமின்றி சென்றுவர முடிவதால், மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், மலையைச் சுற்றிலும் வலம் வர ஏதுவாக அரசு சார்பில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi