Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் தாசில்தார், விஏஓ கைது

ஈரோடு: பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற துணை தாசில்தார், விஏஓ ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் அருகே உள்ள பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். இவர் பட்டா மாறுதல் கேட்டு, பள்ளபாளையம் ‘அ’ கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து, பெருந்துறை தாலுகா மண்டல துணை தாசில்தார் நல்லசாமி, பள்ளபாளையம் ‘அ’ கிராம நிர்வாக அலுவலர் சரத்குமார் ஆகிய இருவரும் பட்டா மாறுதல் செய்தனர்.

அப்போது தனசேகரனிடம், பட்டா மாறுதல் செய்யப்பட்டவுடன் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என இருவரும் பேரம் பேசியதாக தெரிகிறது. அதன்பேரில் தனசேகரனுக்கு பட்டா மாறுதல் செய்து கொடுத்துள்ளனர். ஆனால் தனசேகரன் லஞ்சம் கொடுக்க முன்வரவில்லை. இதையடுத்து, இருவரும் தனசேகரனிடம் பணம் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதையடுத்து, தனசேகரன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் அறிவுறுத்தலின்படி, கிராம நிர்வாக அலுவலர் சரத்குமார், மண்டல துணை தாசில்தார் நல்லசாமி ஆகியோரிடம் தான் பணத்தை எப்போது, எங்கே கொடுக்க வேண்டும்? என தனசேகரன் கேட்டுள்ளார்.

அப்போது, பள்ளபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கே பணத்தை கொண்டு வருமாறு அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, திட்டமிட்டவாறு நேற்று தனசேகரன், பள்ளபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தார் நல்லசாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சரத்குமார் ஆகியோரிடம் லஞ்சப் பணம் ரூ.15 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, ஈரோடு தலைமை நீதிமன்ற நடுவர் சக்திவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.