சென்னை: பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை: பனைமரத் தொழிலாளர்கள் பதநீர் இறக்கி கருப்பட்டி உற்பத்தி செய்யும் போது பதநீர் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு புளிப்பாக மாறும் தன்மையுடைய நிலையில், புளித்த பதநீரை ‘கள்’ என கருதி சில காவல் துறையினர் பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது பிணை இல்லாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்கின்றனர்.
இதனால் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். 4 மாதங்கள் மட்டுமே பதநீர் இறக்கும் தொழில் செய்து அந்த தொழிலாளர்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்தநிலையில், போலீசாரின் வழக்கு நடவடிக்கையினால் பனைமரத் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க காவல் துறையினருக்கு அரசு தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும்.


