தமிழ்நாட்டில் உள்ள முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் நேற்று நடந்த மீனவர் நல மாநாட்டில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மீனவர்களின் நலன் கருதியும், மீன்பிடித்தொழில் மேம்பாட்டுக்காகவும் 10 அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தியுள்ளார். அதாவது, மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 5,035 பேருக்கு பட்டா, 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவு கடன், மீன்பிடி தடைக்காலத்தின்போது வழங்கப்பட்ட நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்வு, 1,000 நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40 சதவீத மானியத்தில் இயந்திரங்கள், நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு 3,400 லிட்டரில் இருந்து 3,700 லிட்டராக அதிகரிப்பு, விசைப்படகுகளுக்கு மானிய விலையில் டீசல் 18 ஆயிரம் லிட்டரில் இருந்து 19 ஆயிரம் லிட்டராக உயர்வு, நாட்டுப்படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரில் இருந்து 4,400 லிட்டராக உயர்வு, தங்கச்சிமடத்தில் மீன்பிடி துறைமுகம் மற்றும் பாம்பன் வடக்கு பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி, மீனவர் விபத்து காப்புறுதி திட்டம் மற்றும் காணாமல் போன மீனவர் குடும்பத்துக்கு சுழல் நிதி வழங்கும் திட்டம், மீனவர் வீட்டு வசதி அலகுத்தொகை ரூ.1.7 லட்சத்தில் இருந்து ரூ.2.4 லட்சமாக உயர்வு, மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும் என முத்தான அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இந்த திட்டங்களுக்காக ரூ.926.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2,77,347 மீனவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் மீனவர் நலனுக்காக திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக, நீண்ட காலமாக மீன்வளத்துறை என அழைக்கப்பட்ட இத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என மாற்றப்பட்டது. 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 2.07 லட்சம் மீனவர்களுக்கு கடந்த 2 ஆண்டில் ரூ.67 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலில் 5வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 1,076 கி.மீ. நீளமான கடற்கரையை கொண்ட தமிழ்நாடு, மீன்பிடித்தொழிலில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது.
வகை வகையாக கடலில் அன்றே கலம் செலுத்தியவர்கள் நம் தமிழர்கள். இப்படி நம் மீனவர்களுக்குரிய பெருமை ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் எல்லை தாண்டுதல் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இந்திய மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்துகிறது. இதை, ஒன்றிய அரசும், பிரதமர் மோடியும் கண்டுகொள்வதில்லை. இப்படி இருக்கையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நம் மீனவர்களையும், அவர்களது தொழிலையும் பாதுகாக்கும் வகையில், நேரில் சென்று பாசக்கரம் நீட்டியுள்ளார். இது, மீனவர்கள் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்துள்ளது.
கடலை நம்பி, தமிழ்நாட்டில் பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடலில் இருந்து மனிதனுக்கு தேவையான உணவுப்பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை கிடைக்கிறது. இந்நிலையில், எதிர்காலத்தில் மனித குலத்துக்கு தேவையான உணவில், 90 சதவீதம் கடலில் இருந்தே பெறப்போகிறோம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அத்தகைய கடல் உணவுகளை, மழை, வெயில், புயல் என பாராது கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் நம் மீனவர் நலன் காக்க, ஓசையின்றி சேவை செய்து வரும் தமிழ்நாடு முதல்வருக்கு கிரேட் சல்யூட்.