திருமலை: பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த 2 சகோதரிகள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் உதயகிரி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரமணம்மா. இவர்களுக்கு வினிலா(17), அகிலா(16) என 2 மகள்கள். இந்நிலையில் வினிலா சில மாதங்களுக்கு முன்பு காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினாராம். அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை கண்டுபிடித்து அறிவுரை கூறி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
இதையடுத்து வெங்கடேஷ் தனது குடும்பத்தினருடன் கடந்த மாதம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பாலாப்பூர் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். இதனால் வினிலாவும், அகிலாவும் பெற்றோரின் பேச்சை சரிவர கேட்காமல் நடந்து கொண்டார்களாம். இதனால் இருவரையும், பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த இருவரும் நேற்று தங்களது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஐதராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.