புதுடெல்லி: ‘திருமணம் செய்வதற்கான உரிமை மனித சுதந்திரத்தின் ஓர் அங்கமாகும். வயது வந்தோர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்து கொள்வதில், பெற்றோர் உட்பட யாரும் தடையாக இருக்க முடியாது’ என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெற்றோர் சம்மதத்தை மீறி திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இஸ்லாமிய வழக்கப்படி இம்மாத தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும், பெண்ணின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டுவதாகவும் தம்பதியினர் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சவுரவ் பானர்ஜி அளித்த தீர்ப்பில், ‘‘தம்பதியினருக்கு போதுமான பாதுகாப்பை சம்மந்தப்பட்ட போலீசார் வழங்க வேண்டும். திருமணம் செய்வதற்கான உரிமை என்பது மனித சுதந்திரத்தின் ஓர் அங்கமாகும். அரசியலமைப்பின் 21வது பிரிவில் உள்ள வாழ்வதற்கான உரிமையான ஒருங்கிணைந்த அம்சமாகும். ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்ய முடிவெடுத்த பிறகு, பெற்றோர், சமூகம் மற்றும் அரசு என யாரும் தடையாக இருக்க முடியாது. இந்த தம்பதியின் வாழ்க்கையில் யாரும் தலையிட அதிகாரம் இல்லை’’ என்றார்.