Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பந்தலூர் அருகே பரபரப்பு வனத்துறை ஜீப்பை தூக்கி வீசி துவம்சம் செய்த காட்டு யானை

*வேட்டைத்தடுப்பு காவலர்கள் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் யானைகள் குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள், கடைகளை தாக்குவது, விவசாய பயிர்களை சேதம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் தேவாலா வனச்சரகம் தொண்டியாளம் பகுதியில் வனத்துறையினர் யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென உப்பட்டி, பந்தலூர் நெடுஞ்சாலையில் குறுக்கிட்ட கொம்பு யானை ஒன்று சாலையில் நின்றிருந்த வனத்துறை வாகனத்தை தனது தந்தத்தால் குத்தி உடைத்து சேதம் செய்து தலைகுப்புற தள்ளியுள்ளது.இதனால், வாகனத்தில் இருந்த வேட்டைத்தடுப்பு காவலர்கள் 5 பேரும் கத்தி கதறியுள்ளனர். இவர்கள் கூச்சலிட்டதில் யானை அங்கிருந்து நகர்ந்து சென்றது.

வாகனத்தில் இருந்த வேட்டைத்தடுப்பு காவலர் லிவிங்ஸ்டார் மற்றும் பாலசுந்தர் ஆகியோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. ஓட்டுநர் உப்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வனத்துறை வாகனத்தை யானை தாக்கிய சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில், தேவாலா வனச்சரகர் சஞ்சீவி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனத்தை மீட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட வேட்டைத்தடுப்பு காவலர்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். படுகாயம் அடைந்த டிரைவர் ரமேஷ்குமார் கேரள மாநிலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வனச்சரகர் சஞ்சீவி கூறுகையில், ‘‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதிக்கு வந்த யானை தற்போது மீண்டும் வந்துள்ளது யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்’’ என்றார். மேலும் பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், காட்டு யானைகள் தொடர்ந்து குடியிருப்புக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.