Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முன்னாள் பஞ்.தலைவியின் கணவர் லாரி ஏற்றிக்கொலை?

ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா குறுக்குச்சாலையை அடுத்த கொல்லம்பரும்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். இவரது மனைவி வள்ளியம்மாள். இவர், கடந்த 1996 முதல் 2001 வரை கொல்லம்பரும்பு பஞ்சாயத்து தலைவியாக பதவி வகித்துள்ளார். தற்போது அதிமுக கிளை செயலாளராக உள்ள முத்து பாலகிருஷ்ணன், இப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

அண்மையில் முக்கிய பிரமுகருக்கு பெரிய அளவிலான நிலத்தை முத்து பாலகிருஷ்ணன் முடித்துக் கொடுத்துள்ளார். இவருக்கு உள்ளாட்சி தேர்தல் மற்றும் தொழில் போட்டி காரணமாக சிலருடன் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை முத்து பாலகிருஷ்ணன் பைக்கில் குறுக்குச்சாலை சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சந்திரகிரி அருகே எதிரே வந்த டிப்பர் லாரி, பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தகவலறிந்து தூத்துக்குடியில் திரண்ட முத்து பாலகிருஷ்ணனின் உறவினர்கள், இது விபத்து கிடையாது. அவர் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டு உள்ளார். எனவே இதற்கு காரணமான நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவர் சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.