மதுரை: . கிராமப்புற பகுதிகளில் சாலைகள் அமைப்பது, குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவது, வடிகால் வசதி என பல்வேறு அடிப்படை கிராம வளர்ச்சி பணிகளை செய்ய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. இந்த நிதியினை பயன்படுத்துவதற்கென ஊராட்சி மன்ற தலைவர்களின் அனுமதியை ஆன்லைன் மூலமாக பெறும் வகையில் ஒவ்வொருவரும் தனியாக ஆன்லைன் லாகின் கீ பயன்படுத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கீழ் உள்ள ஊராட்சிகளில், ஊராட்சி மன்ற தலைவரின் நிதியின் கீழ் ஒப்பந்தம் மூலம் செய்யப்படும் கிராம வளர்ச்சி பணிகளில் முறைகேடு நடந்ததாகவும், லட்சக்கணக்கான ரூபாய் கையாடல் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தம் அறிவிக்காமலேயே பணிகள் நடைபெற்றதாக நிதி எடுக்கப்பட்டுள்ளது எனவும் புகார் எழுந்தது.
இதனைத்தொடர்ந்து இந்த நிதி முறைகேடு குறித்து விசாரணை நடத்துமாறு மதுரை கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டிருந்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவரின் லாகின் கீயை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராமர், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முனியப்பன், காந்திமதி, சிவக்குமார், சாந்தி, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சிக்கந்தர் ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்து மதுரை கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.