நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வண்டலூர் ஊராட்சி பரப்பனூரை சேர்ந்தவர் நல்லசிவம். இவரது மனைவி சியாமளா தேவி(27). இவர், வண்டலூர் ஊராட்சி மன்ற 1வது வார்டு உறுப்பினர். நல்லசிவம் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு தேவி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். தாய் வாசுகி நேற்று காலை பரப்பனூருக்கு வந்து தனது மகளை தேடிப்பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் பரப்பனூரில் உள்ள காட்டுப்பகுதியில் ஒரு மரத்தில் தேவி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசில் வாசுகி புகார் கொடுத்தார். அதில் தனது மகள் தேவிக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்து அந்த வாலிபரின் பெற்றோர் தேவியிடம் தகராறு செய்துள்ளனர். இதை தொடர்ந்து தேவி வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார்.
எனவே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.