பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே, திருமலீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பள்ளிப்பட்டு அருகே பழைய கொளத்தூர் கொசஸ்தலை ஆற்றின் கரைப் பகுதியில் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகர பேரரசர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில் திரிபுரசுந்தரி சமேத திருமலீஸ்வரர் கோயில் கட்டப்படதாக இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இருப்பினும் காலப்போக்கில் கோயில் சிதிலமடைந்து காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தணியைச் சேர்ந்த சேஷன்-யக்னபிரியா தம்பதி கோயிலுக்கு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள முன் வந்தனர். கிராமமக்கள் உதவியுடன் சிதிலமடைந்த கோயில் ராஜகோபுரம், விமான கோபுரங்கள், அம்மன் சன்னதிகள், கல் மண்டபம், கோயில் சுற்றி கல் மண்டம், சுற்றுச்சுவர் உள் பிரகாரங்கள் புதுப்பித்து கலைநுட்பத்துடன் சிலைகள் அமைத்து வண்ணம் தீட்டுவது உள்ளிட்ட கோயில் திருப்பணிகள் அனைத்தும் முடிவுற்றன.
இதனையடுத்து கடந்த வியாக்கிழமை முதல் நேற்று வரை 5 நாட்கள் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கோயில் மற்றும் கிராம வீதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைத்து 20 பேர் கொண்ட சிவாச்சாரியார்கள் நித்திய ஹோம குண்ட பூஜைகள் செய்தன்ர். விழாவில், 5ம் நாளான நேற்று காலை 4ம் காலை யாக பூஜைகள், மஹா பூர்ணாஹுதி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோயில் முன்பு கூடியிருக்க சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று காலை 10 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நமச்சிவாய பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
தொடர்நது திருமலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று மலர் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை திரிபுரசுந்தரி சமேத திருமலீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாக்குழுவினர் மற்றும் கொளத்தூர் கிராம மக்கள் மஹா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.