பாலக்காடு : கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயனின் நான்காவது ஆண்டு ஆட்சியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி பாலக்காடு மாவட்ட தகவல் தொடர்புத்துறை மற்றும் அனைத்துத்தரப்பு அரசு துறைகள் சார்பில் பாலக்காடு ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்டு அருகே அமைந்துள்ள மைதானத்தில் எனது கேரளம் என்ற பெயரில் பொருட்காட்சி விற்பனைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்காட்சியை பார்க்க திரளாக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி செயல்பட்டு வருகிறது. வரும் 10 ம் தேதி வரை பொருட்காட்சி, விற்பனைக்கூடம் செயல்படும்.
நுழைவுக்கட்டணம் அனைவருக்கும் இலவசம். பொருட்காட்சி மேளாவில் குதிரை வண்டி சவாரியும் இடம் பிடித்துள்ளது. மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையில் குதிரை வண்டி சவாரி செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை 9 பேர் பயணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ராஜா என்ற பெயரிலுள்ள குதிரை வண்டி சவாரிக்கு தயார்படுத்தப்பட்டுள்ளது. இந்த வண்டியில் பொது மக்கள் ஆர்வமுடன் சவாரி செய்தபடி உள்ளனர். குதிரை வண்டியில் இருந்தபடி போட்டோக எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்புத்துறை சார்பில் விபத்தில் இருந்து எவ்வாறு மக்களை மீட்பது என்பது குறித்து செயல்விளக்கம் மூலம் பொது மக்களுக்கு தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வயநாடு மாவட்டம் முண்டக்கயம், சூரல் மலை விபத்துகளில் சிக்கியவர்களை காப்பாற்றிய விதம் குறித்து புகைப்படங்கள் தீயணைப்புத்துறை அரங்கில் இடம் பெற்றுள்ளது.