பாலக்காடு : பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையை மாநில அரசு புறகணிப்பதைக் கண்டித்தும் காலி பணியிடங்களை நிரப்ப கோரியும் மருத்துவமனை மேம்பாட்டுக்குழுவினர் சார்பில் நூதனப் போராட்டம் நேற்று நடந்தது. பாலக்காடு அரசு மருத்துவமனையில் அவசரப் பிரிவுக்கு சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுகின்ற நோயாளிகளை உடனடியாக திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சை என்ற பெயரில் அனுப்பி விடுவது என்பது தொடர்கதையாக உள்ளது.
இங்கு ஜெனரல் மெடிஷின் 2, பாரன்சிக் மெடிசின் 2, அனஸ்தேஷியா 2, துணை கண்காணிப்பாளர் 1 என டாக்டர்களின் காலியிடங்கள் உள்ளன. யூரோளஜி பிரிவில் டாக்டர்களின் சேவை கடந்த வாரம் முதல் குறைவாக உள்ளது.மேலும், இதய நோயாளிகளை பரிசோதனை செய்வதற்குரிய டாக்டர்கள் இல்லை.இதனால் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளிலும், திருச்சூர் அல்லது கோவை மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலைகள் உள்ளன. டாக்டர்கள் காலியிடங்களை உடனடியாக நியமனம் செய்யவேண்டும்.
நோயாளிகளின் இக்கட்டான சூழ்நிலைகளை புரிந்துக்கொண்டு அதிகாரிகள் செயல்படவேண்டும் என பலமுறை மேம்பாட்டுக்குழுவினர் புகார் மனுக்கள் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதைக் கண்டனம் தெரிவித்து நூதனப்போராட்டம் நேற்று நடைபெற்றது.
மருத்துவமனை சூப்ரெண்டென்ட் அலுவலகம் நடந்த போராட்டத்தில் எச்.எம்.சி., கமிட்டி உறுப்பினர்களான வார்டு கவுன்சிலர் அனுபமா பிசோத்,போபன் மாட்டு மந்தை, மாதவ வாரியர், மணிகண்டன் புத்தூர், கிதர் முகமது, பிரசோத் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.