இஸ்லாமாபாத்: பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்துள்ளோம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார்.காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேபாளத்தைச் சேர்ந்தவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக ஒன்றிய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவும், நிதியுதவியும் அளிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது.
இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா ஆசிப் அளித்த பேட்டியில், “பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி மற்றும் ஆதரவு என்ற மோசமான வேலையை அமெரிக்காவுக்காக 3 தசாப்தங்களாக செய்தோம். பிரிட்டன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்காகவும் செய்தோம். ஆனால், இது பெரிய தவறு. இதனால், பாகிஸ்தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆப்கனில் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான போரிலும், இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா நடத்திய தாக்குதலிலும் பாகிஸ்தான் பங்கு கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.