டெல்லி : இந்தியா- பாகிஸ்தான் இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து வரலாறு காணாத தாக்குதல் தொடர்வதால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. நேற்று இரவு ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணைகள், டிரோன்கள் அதிரடி தாக்குதல் நடத்தின.மேலும் ஏராளமான பாக். விமானங்களும் அணி வகுத்தன. இதை இந்தியா விமானப்படை அதிரடியாக செயல்பட்டு நடுவானில் சுட்டு வீழ்த்தியது.
இதே போல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பதன்கோட், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரை குறிவைத்து பாக். படைகள் தாக்குதல் நடத்தின. இந்தியா மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டதால் இந்தியாவும் பதிலடி கொடுத்தது. சுமார் 50 ட்ரோன்கள்,4 பாக். விமானங்கள், 8 ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் இஸ்லாமாபாத், லாகூர், சியால்கோட், கராச்சி உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து இந்தியா நேரடி தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே நேரடியாக போர் மூண்டது. அணுஆயுதம் வைத்துள்ள இருநாடுகள் இடையே நேரடி போர் மூண்டதால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் கடற்படை, தரைப்படை மற்றும் விமானப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.பாகிஸ்தானின் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்ட நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது. இதனிடையே பாகிஸ்தானைச் சேர்ந்த சில சமூக வலைதளங்களில் திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றும் சில சமூக வலைதள பக்கங்களில் வரும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.