டெல்லி : பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேபாளத்தைச் சேர்ந்தவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக ஒன்றிய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்குள் பாகிஸ்தானியர்கள் வர ’சார்க்’ விசா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த விசா சேவை நிறுத்திவைக்கப்பட்டது. இந்த விசா பெற்று இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் வெளியேற உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல் வழங்கினார். அதில், “தங்களது மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு, நாட்டை விட்டு வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று வலியுறுத்தி உள்ளார்.