Thursday, March 27, 2025
Home » ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் திறமைமிக்க 6 கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் திறமைமிக்க 6 கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

by Ranjith

சென்னை: மரபுவழி ஓவியம், நவீன பாணி ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் திறமைமிக்க 6 கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மரபுவழி ஓவியம், நவீன பாணி ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் திறமைமிக்க கலைஞர்களுக்கு ‘கலைச்செம்மல்’ விருது வழங்கி ஊக்குவித்து வருகிறது.

இவ்விருதுடன், விருதாளர்களுக்கு செப்புப் பட்டயம், ஒரு லட்சம் ரூபாய் விருதுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 6 புகழ்பெற்ற கலைஞர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2024-2025ம் ஆண்டிற்கான ‘கலைச்செம்மல்’ விருதிற்கு மரபுவழி ஓவியப் பிரிவில் மணிவேலு, மரபுவழி சிற்ப பிரிவில் பாலச்சந்தர் மற்றும் கோ.கன்னியப்பன், நவீனபாணி ஓவியப் பிரிவில் முரளிதரன் மற்றும் செல்வராஜ், நவீனபாணி சிற்ப பிரிவில் ராகவன் ஆகிய 6 கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அக்கலைஞர்களுக்கு தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘கலைச்செம்மல்’ விருதுகளையும், விருதிற்கான செப்புப் பட்டயம், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் மணிவாசன், மற்றும் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கவிதா ராமு, ஆகியோர் உடனிருந்தனர்.

* பத்திரிகையாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது
கலைஞர் எழுதுகோல் விருதுகளை பத்திரிகையாளர்கள் இருவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என்று 2021-22ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், கடந்த 2021ம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன், 2022ம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மூத்த பத்திரிகையாளர் சாமிக்கு வழங்கப்பட்டது.அந்த வகையில் 2023ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு நக்கீரன் எனும் பெயரில் புலனாய்வு இதழினை தொடங்கி பல ஆண்டுகளாகப் பல்வேறு பாராட்டுகளைப் பெற்று வெற்றிகரமாக இதழினை நடத்திவரும் நக்கீரன் கோபாலுக்கு, கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண்மையைப் போற்றும் வகையில் சிறப்பினமாகப், பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில் 18 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ள சுகிதா சாரங்கராஜ் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகியோருக்கு கலைஞர் எழுதுகோல் விருதுகளையும், தலா 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

five × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi