Saturday, May 17, 2025
Home செய்திகள்Showinpage பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயாராகி வரும் நிலையில் அணு ஆயுதத்தை தூக்கினால் பாகிஸ்தானுக்கு பேரழிவு நிச்சயம்: அணு விஞ்ஞானிகளின் புல்லட்டின் ஆய்வறிக்கையில் பரபரப்பு தகவல்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயாராகி வரும் நிலையில் அணு ஆயுதத்தை தூக்கினால் பாகிஸ்தானுக்கு பேரழிவு நிச்சயம்: அணு விஞ்ஞானிகளின் புல்லட்டின் ஆய்வறிக்கையில் பரபரப்பு தகவல்

by Suresh

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயாராகி வரும் நிலையில் இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தானின் 5 அணு ஆயுத ஏவுகணை தளங்கள் குறித்த தகவல்களை அணு விஞ்ஞானிகளின் புல்லட்டின் ஆய்வறிக்கையில் வெளியாகி உள்ளது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வகையில் பாகிஸ்தான் தலைவர்கள் பேசிவருவதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஏப். 22ம் தேதி நடந்த பஹல்காமில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

26 சுற்றுலா பயணிகளை கொன்ற தீவிரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகளையும் அவர்களின் எஜமானர்களையும் ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் கடுமையான விரக்தியில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதற்கெல்லாம் மத்தியில், பஹல்காம் தீவிரவாத சம்பவத்தின் குற்றவாளிகளுக்கும், அவர்களைத் தூண்டியவர்களுக்கும் எப்போது பாடம் கற்பிக்கப்படும்? என்பது தான். இதைச் சொல்வது அல்லது கேட்பது எவ்வளவு எளிதானதோ, அதைச் செயல்படுத்துவதும் அதே அளவுக்கு சிக்கலானது. சுதந்திரமாக செயல்பட ராணுவத்திற்கான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், ராணுவ நடவடிக்கை எப்போது, ​​எங்கே, எப்படி நடைபெறும் என்பது தெரியவில்லை.

பஞ்சாபின் எல்லைப் பகுதியான ஃபிரோஸ்பூர் கண்டோன்மென்ட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை அரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின. ஏதேனும் தாக்குதல் நடந்தால் மக்களை எப்படி தயார்படுத்துவது? என்பதற்காக செய்யப்பட்டுள்ளது. இதே வழியில், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் நேற்று மாநிலங்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. வான்வழித் தாக்குதலின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வரும் 7ம் தேதி சிவில் பாதுகாப்பு மாதிரி பயிற்சிக்கு (போர் ஒத்திகை) தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு தாக்குதல் நடந்தால் மக்கள் தங்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது? மற்றவர்களை எவ்வாறு காப்பாற்றுவது? என்பது குறித்து விளக்கப்படும். மாதிரி போர் பயிற்சியின் போது மின் தடை ஏற்படும், மேலும் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கும். கடந்த 1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இப்போது தான் முதல் முறையாக இந்த போர் ஒத்திகை அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவது என்பது பாகிஸ்தானுக்கு கடினமாகிவிடும். ஏற்கனவே 15 பில்லியன் டாலர்களாக இருக்கும் அதன் அந்நிய செலாவணி இருப்புகள் மீது அழுத்தம் ஏற்படும். பாகிஸ்தானின் ஆட்சியாளர்களுக்கு
அவர்களின் பொருளாதாரம் சரிந்துவிடும் அபாயம் பற்றித் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நிலைமை மோசமடையும் என்றே கூறுகின்றனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானுக்கு உரிய பாணியில் பாடம் கற்பிக்க இந்தியா தயாராகி வரும் வேளையில், பாகிஸ்தானில் பொறுப்பான பதவிகளில் உள்ள தலைவர்களிடமிருந்து வரும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளின் எண்ணிக்கை நிற்கவில்லை. ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி, வழக்கமான ஆயுதங்கள் முதல் அணு ஆயுதங்கள் வரை அனைத்தையும் பயன்படுத்துவதாக மிரட்டியுள்ளார்.

அதேபோல் ​​பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் ஏற்கனவே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதில் மும்முரமாக உள்ளனர். அணு ஆயுதத் தாக்குதலின் அச்சுறுத்தல் சிறிய அச்சுறுத்தல் அல்ல. அணுசக்தி விஷயத்தில் பாகிஸ்தான் மிகவும் பொறுப்பற்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதையே இது காட்டுகிறது. அணு ஆயுதங்கள் உண்மையில் ஒரு தடுப்பு மருந்தாகக் கருதப்படுகின்றன. இதனால் போர் வெடிக்காது, அவ்வாறு மீறி வெடித்தாலும் கூட, அது நீண்ட காலம் நீடிக்காது. ஏனென்றால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அழிவு நிச்சயம்.

கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் அணு ஆயுத பேரழிவை ஒருபோதும் மறக்க முடியாது. ஆனால் பாகிஸ்தானின் அணுகுமுறை இந்த அழிவை அது உணரவில்லை என்பதைக் காட்டுகிறது. பாகிஸ்தான் அணு ஆயுத அச்சுறுத்தல் விடுக்கும்போது, ​​அதன் அணுசக்தி உண்மையில் எவ்வளவு என்பதை அறிந்து கொள்வது முக்கியம். இது தொடர்பாக பாகிஸ்தான் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை வழங்கவில்லை. ஆனால் உலகெங்கிலும் உள்ள அணு விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் இது குறித்து ஊகித்து வருகின்றனர். இதுதொடர்பாக, கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியன்று, அணு விஞ்ஞானிகளின் புல்லட்டின் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இந்த அறிக்கையின் தலைப்பு. ‘2023 பாகிஸ்தான் அணுசக்தி கையேடு’. பல்வேறு ஆதாரங்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. 2023ம் ஆண்டில் பாகிஸ்தானிடம் சுமார் 170 அணு ஆயுதங்கள் இருந்ததாக மதிப்பிடுகிறது. அமெரிக்க விஞ்ஞானிகளின் அணு தகவல் திட்டத்தின் கூட்டமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் ஹான்ஸ் எம். கிறிஸ்டென்சன், மாட் கோர்டா மற்றும் எலியானா ஜான்ஸ் ஆகியோர் இந்த அறிக்கையைத் தயாரிக்க பாகிஸ்தானின் ராணுவ முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்களின் செயற்கைக்கோள் படங்களை பகுப்பாய்வு செய்தனர்.

அதன்படி பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களின் இருப்பை அதிகரித்து வருவதையும், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் போன்ற அவற்றை இயக்குவதற்கான அமைப்புகளை விரிவுபடுத்தியுள்ளதையும் தெளிவுபடுத்தியது. அணுஆயுத விசயத்தில் இந்தியாவும் பாகிஸ்தானுக்கு இணையாக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன என்பது அறிக்கையின் மதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவிடம் சுமார் 180 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் இந்தியா – பாகிஸ்தானின் அணு ஆயுத உத்திகள் வேறுபட்டவை. பாகிஸ்தானின் உத்தி, போர் தொடங்கியவுடன் பயன்படுத்தக்கூடிய வியூக அணுகுண்டுகளில் கவனம் செலுத்துகிறது. பாகிஸ்தானின் அணுகுண்டுகளுக்குப் பின்னால் சீனா ஒரு சக்தியாக உள்ளது என்பதும் அறிக்கையில் தெளிவாகத் தெரிகிறது.

அதே நேரத்தில், பாகிஸ்தான் – சீனா இரண்டையும் மனதில் கொண்டு இந்தியாவின் உத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா முதலில் அணு ஆயுத தாக்குதலை நடத்தாது என்பது தெளிவாகிறது. ஆனால் இந்தியா தனது அணுசக்தியை தற்காப்புக்காக அணுகுண்டு தாக்குதலுக்கு மிகவும் வலுவான பதிலடி கொடுக்க மட்டுமே பயன்படுத்தும். கடந்த 2023ம் ஆண்டு அறிக்கையின்படி, தெற்காசியாவில் அணு ஆயுத அச்சுறுத்தல் தீவிரமாகி வருகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத வல்லரசுகளாக தொடர்ந்து தயாராக உள்ளன. நெருக்கடி ஏற்பட்டால் அணு ஆயுதங்களை உடனடியாகப் பயன்படுத்துவதற்கான விநியோக அமைப்புகளை இரு நாடுகளும் உருவாக்கி வருகின்றன. பாகிஸ்தானில் கஹுதா மற்றும் கர்வாலில் யுரேனியம் செறிவூட்டல் ஆலைகள் உள்ளன. இங்கு அணு ஆயுதங்களில் பயன்படுத்தக்கூடிய யுரேனியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கஹுதா, வா, நிலோர், ஃபதே ஜங், சாஷ்மா மற்றும் குஷாப் ஆகிய இடங்களில் கதிரியக்கப் பொருட்களின் உற்பத்தி, அதாவது அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் பிளவுப் பொருட்களின் உற்பத்தி ெசய்யப்படுகிறது.

பாகிஸ்தான் தனது பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஷாப் அணுசக்தி வளாகத்தில் நான்கு கன நீர் புளூட்டோனியம் உற்பத்தி உலைகளைக் கட்டியுள்ளது. இது தவிர, இஸ்லாமாபாத்தின் மேற்கே உள்ள காலா சித்த தார் மலைகளில் ஃபதே ஜங் அருகே உள்ள தேசிய மேம்பாட்டு வளாகத்தில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகள் மற்றும் அவற்றின் மொபைல் ஏவுகணைகளை உருவாக்கும் வசதியை பாகிஸ்தான் வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. இதற்காக, சாலை-மொபைல் டிரான்ஸ்போர்ட்டர் எரெக்டர் லாஞ்சர்கள் அதாவது டெல்-கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏவுகணைகளை எடுத்துச் சென்று பின்னர் அவற்றைச் சுடுவதற்கு டிரான்ஸ்போர்ட்டர் எரெக்டர் லாஞ்சர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இது நீண்ட தூர ஏவுகணைகளுடன் இணைக்கப்பட்ட டெல் சேஸிஸை செயற்கைக்கோள் படங்கள் தெளிவாகக் காட்டின. பாகிஸ்தானின் நஸ்ர், ஷாஹீன் மற்றும் பாபர் ஏவுகணைகளுக்கான இந்த டெல் கட்டமைப்பு ஜூன் 2023 செயற்கைக்கோள் படங்களில் தெளிவாகத் தெரிந்தது. அறிக்கையின்படி, தர்னாவா மற்றும் தக்ஷஷிலா பகுதிகளில் ஏவுகணைகளை உருவாக்குவதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அணு ஆயுத உற்பத்தி பற்றிய பொதுத் தகவல்கள் மிகக் குறைவு; ஆனால் இஸ்லாமாபாத்தின் வடமேற்கே உள்ள வா பகுதிக்கு அருகிலுள்ள பாகிஸ்தானின் ஆயுதத் தொழிற்சாலைகளில் இந்தப் பணிகள் நடைபெற்று வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அணு விஞ்ஞானிகளின் புல்லட்டின் அறிக்கையின்படி, இந்த ஏவுகணைகளை வைத்திருக்க பாகிஸ்தான் குறைந்தது ஐந்து ஏவுகணை தளங்களை உருவாக்கியுள்ளது. அவை குஜ்தர் காரிசன், சர்கோதா காரிசன், பனோ அகீல் காரிசன் காரிஸன், ஆர்கோ காரிஸன் மற்றும் குஜ்ரன்வாலா காரிஸன் ஆகியவையாகும்.

இந்த ஏவுகணை தளங்களில் வெவ்வேறு ஏவுகணைகள் வைக்கப்பட்டிருப்பதற்கான சான்றுகள் தெளிவாகத் தெரிவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இந்த ஏவுகணைகள் இங்கே மிகவும் பாதுகாப்பாக நிலத்தடியில் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர, இந்த ஏவுகணைகளை கொண்டு செல்வதற்கான டெல்-கள் அதாவது டிரான்ஸ்போர்ட்டர் எரெக்டர் லாஞ்சர்களும் உள்ளன. அறிக்கையின்படி, பாகிஸ்தான் நிலத்தடியில் இருந்தும், கடலில் உள்ள கப்பல்களிலிருந்தும் ஏவக்கூடிய கப்பல் ஏவுகணைகளை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. இவற்றில் பாபர்-ஹாட்ஃப் 7 அடங்கும். இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுத சோதனைக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் தனது முதல் அணு ஆயுத சோதனையை கடந்த 1998ம் ஆண்டு மே 28ம் தேதி நடத்தியது.

பின்னர், சாகாய் 1 என்ற பெயரில், பலுசிஸ்தான் மாகாணத்தின் சாகாய் மலைகளில் பாகிஸ்தான் ஆறு நிலத்தடி அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. இந்த மலைகளுக்கு அடியில் நடந்த அணுகுண்டு சோதனை மலைகளின் நிறத்தை மாற்றி, மலைகளுக்கு மேலே தூசி மேகங்கள் உயரமாக எழச் செய்ததை காண முடிந்தது. அப்போது பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரீஃப் இருந்தார். தற்போது அவருடைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராக உள்ளார். அணு ஆயுத சோதனையின் மூலம், பாகிஸ்தான் உலகின் ஏழாவது அணு சக்தியாகவும், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் முதல் முஸ்லிம் நாடாகவும் மாறியது.

இந்தியாவின் அணுசக்தித் திட்டம் முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது என்றாலும், பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம் உலகம் முழுவதிலுமிருந்து திருடப்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது வேறு விஷயம். உலகெங்கிலும் இருந்து வரும் பல புலனாய்வு அறிக்கைகள் இதை உறுதிப்படுத்துகின்றன. எனவே திருட்டு மற்றும் கடத்தல் மூலம் பெறப்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் ஒரு அணுசக்தி நாடாக இருந்து வருகிறது. இருந்தும் அவர்களின் நடத்தை பொறுப்புடன் இல்லை. இவர்களின் பொறுப்பற்ற நடத்தை, வரும் நாட்களில் அவர்களை எங்கு தள்ளுகிறது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க முடியும்.

பாக். மிரட்டலின் நோக்கம் என்ன?
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்கள் ஓரளவு உண்மையானவை; ஆனால் அவை உளவியல் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. பாகிஸ்தானின் அணு ஆயுத இருப்பு என்பது 160-180 அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. அணு ஆயுதங்களை மறைத்து வைக்கவும், அதனை ஏவுவதற்கும் தேவையான அடிப்படை தொழில்நுட்பம் பாகிஸ்தானிடம் உள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் மற்றும் வறுமை ஆகியவை அணு ஆயுத பராமரிப்பை அவர்களுக்கு சுமையாக்குகின்றன.

உள்நாட்டு அரசியல் பிளவுகள், தீவிரவாதம், ராணுவ ஆதிக்கம் ஆகியன பாகிஸ்தானின் உள்நாட்டு ஆதரவை பலவீனப்படுத்துகின்றன. பாகிஸ்தானின் அணு ஆயுத பயன்பாடு என்பது உலகளாவிய கண்டனத்தை ஏற்படுத்தும். அதேநேரம் இந்தியாவின் அணு ஆயுதங்களும், அதன் திறனும் பாகிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. பாகிஸ்தான் தலைவர்கின் மிரட்டல்களை பொறுத்தமட்டில், உள்நாட்டு மக்களின் கவனத்தை பொருளாதார பிரச்னைகளிலிருந்து திசைதிருப்பும் நோக்கத்தை கொண்டுள்ளன. மேலும் இந்தியாவுடனான பதற்றத்தை தக்கவைத்துக் கொண்டு சர்வதேச கவனத்தை ஈர்ப்பது, சர்வதேச நிதியை பெறுவதற்காக அழுத்தமாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்திரா முதல் வாஜ்பாய் வரை;
கடந்த 1974ம் ஆண்டு இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பொக்ரானில் தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியது. அப்போது இந்திரா காந்தி நாட்டின் பிரதமராக இருந்தார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு, 1998 மே 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில், ராஜஸ்தானின் பொக்ரானில் மேலும் ஐந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி, இந்தியா உலகின் ஒரு பெரிய அணுசக்தி சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இதில் சிறப்பு என்னவென்றால், இந்தியாவின் இந்த நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியாது. இதற்கு ஆபரேஷன் சக்தி என்று பெயரிடப்பட்டது. அணு ஆயுத சோதனைகளுக்குப் பிறகு, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இந்த வெற்றிகரமான சோதனைகளை அறிவித்தார்.

அணு தொழிநுட்பத்தை கசியவிட்ட விஞ்ஞானி;
பொக்ரானில் இரண்டாவது அணுகுண்டு சோதனைக்குப் பிறகு, பாகிஸ்தான் தனது சக்தியைக் காட்ட அவசரமாக சாகையில் அணுகுண்டு சோதனையை நடத்தியது. பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல் கதீர் கான், பாகிஸ்தானின் ரகசிய அணுசக்தி திட்டத்திற்கான தொழில்நுட்பத்தை கசியவிட்டதாக கூறி அவர் 2004ம் ஆ ண்டு பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டார் என்பது தனி வரலாறு. ஈரான், லிபியா மற்றும் வட கொரியாவுடன் அணு தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாகப் பகிர்ந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு அப்துல் கதீர் கான் வீட்டுக்காவலில் கோவிட் நோயால் இறந்தார். அப்துல் கதீர் கான் பாகிஸ்தானில் அணுகுண்டின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

பாகிஸ்தானின் ஏவுகணை தளங்கள்;
அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட விமானங்கள் குறித்து பாகிஸ்தானின் தயாரிப்பு என்ன? என்பது தான். அணு விஞ்ஞானிகளின் புல்லட்டின் அறிக்கையின்படி, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட பாகிஸ்தான் விமானங்கள் மிராஜ் 3 மற்றும் மிராஜ் 5 போர் விமானப் படைகள் ஆகும். பாகிஸ்தான் விமானப்படையின் மிராஜ் போர் விமானங்கள் இரண்டு விமான தளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. மஸ்ரூர் ஏர் மற்றும் ரஃபிகி விமான தளங்கள் உள்ளன. கராச்சிக்கு அருகிலுள்ள மஸ்ரூர் விமானப்படைத் தளம் பாகிஸ்தானின் மூன்று மிராஜ் படைப்பிரிவுகளுக்கு தாயகமாகும். இங்கிருந்து வடமேற்கே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில், பலத்த பாதுகாப்பின் கீழ் நிலத்தடியில் அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளதற்கான சாத்தியக்கூறுகளை இந்த அறிக்கை எழுப்பியுள்ளது.

பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானங்களின் இரண்டாவது தளம் ஷோர்கோட்டுக்கு அருகில் உள்ள ரஃபிகி விமான தளமாகும். மிராஜ் விமானப் படையின் இரண்டு படைப்பிரிவுகள் இங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இது தவிர, பாகிஸ்தானிடம் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜெஎப்-17 போர் விமானங்களும் உள்ளன. இருப்பினும், பாகிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து வாங்கிய எப்-16 போர் விமானங்களையும் கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் கீழ், அது அவர்களை அணு ஆயுதங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காது. இருப்பினும், பாகிஸ்தான் தனது எப்-16 ஏ/பி போர் விமானங்களில் இதுபோன்ற சில மாற்றங்களைச் செய்திருக்கலாம் என்று பல தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்கோதா விமானப்படை தளம் என்று அழைக்கப்பட்ட முஷாஃப் விமானப்படை தளத்தில் எப்-16 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இது லாகூருக்கு வடகிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் இந்த தளத்தில் பாகிஸ்தான் பயன்படுத்தக்கூடிய அணு ஈர்ப்பு குண்டுகள் இல்லை.

இந்த குண்டுகள் இந்த தளத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்கோதா ஆயுத சேமிப்பு வளாகத்தில் பலத்த பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. வடக்கு பாகிஸ்தானில் உள்ள ஜகோபாபாத் அருகே உள்ள ஷாபாஸ் விமான தளத்தில் புதிய எப்-16சி/வி விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாமாபாத்தின் வடமேற்கே உள்ள மின்ஹாஸ் விமானப்படை தளத்தில் சில எப்-16 விமானங்களும் காணப்பட்டன. அணு விஞ்ஞானிகளின் புல்லட்டின் அறிக்கையின்படி, பாகிஸ்தானிடம் திட எரிபொருளில் இயங்கும் அணுசக்தி திறன் கொண்ட ஆறு செயல்பாட்டு பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள் உள்ளன. இவை குறுகிய தூர அப்தாலி அதாவது ஹட்ஃப் 2, கஸ்னவி – ஹட்ஃப் 3, ஷாஹீன்-1ஏ அதாவது ஹட்ஃப் 4 மற்றும் நாஸ்ர் அதாவது ஹட்ஃப் 9 ஆகியனவாகும். இது தவிர, நடுத்தர தூர கவுரி – ஹட்ஃப் 5 மற்றும் ஷாஹீன் 2 – ஹட்ஃப் 6 ஏவுகணைகள் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகளையும் உருவாக்கி வருகிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi