டெல்லி : இலங்கை சென்ற விமானத்தில் தீவிரவாதிகள் தப்பிச் சென்றதாக வெளியான தகவல் புரளி என்பது தெரியவந்துள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹ்லகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதையடுத்து, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பிடிக்க இந்திய ராணுவத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகப்படுபவர்கள் அனைவரும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய உளவு அமைப்புக்கு ஒருவர் அனுப்பிய இமெயிலில், சென்னையில் இருந்து கொழும்பு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹ்லகாம் தாக்குதல் தீவிரவாதிகள் தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. இந்திய உளவுத்துறை தகவலின் பேரில் கொழும்பில் உள்ள பண்டார நாயகே விமான நிலையத்தில் சோதனை நடந்தது. குறிப்பாக சென்னையில் இருந்து கொழும்பு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பாதுகாப்பு படை நடத்திய சோதனையில் தீவிரவாதிகள் யாரும் சிக்கவில்லை.
இந்த நிலையில், சோதனைக்கு பின் விமானம் அடுத்த பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவல் அடிப்படையில் பாதுகப்புப் படையினர் சோதனை மேற்கொண்டதாகவும், இதனால் சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம் ஆகியுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.