இஸ்லாமாபாத்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக காஷ்மீரில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு முதல்முறையாக காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி, , ‘பஹல்காமில் மனிதநேயம் மற்றும் காஷ்மீர் பெருமிதம் ஆகிய இரண்டின் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்துவதும், காஷ்மீர் மக்களின் வருவாயைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும்’ என தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்திய பிரதமர் மீண்டும் ஒருமுறை குற்றம் சாட்டி இருப்பது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எவ்வித நம்பகமான ஆதாரங்களையும் முன்வைக்காமல் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு இது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பிரதேசமாகவே காஷ்மீர் உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பத்தின்படி இந்த சர்ச்சை தீர்க்கப்பட வேண்டும்.
காஷ்மீரில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்கான நியாயமான போராட்டத்திற்கு பாகிஸ்தான் கொள்கை ரீதியில் ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகிறது. காஷ்மீர் தனது சுயநிர்ணய உரிமையை பயன்படுத்த இந்தியா அனுமதிப்பதை, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை அமைப்புகள் உட்பட சர்வதேச சமூகம், உறுதிப்படுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.