டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக செய்தி வெளியிட்ட பிபிசி நிறுவனத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆட்சேபம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் உலகம் முழுவதும் இருக்ககூடிய இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக செய்தி வெளியிட்ட பிபிசி இந்தியா நிறுவனம் தாக்குதல் நடத்தியவர்களை பயங்கரவாதிகள் என குறிப்பிடுவதற்கு பதிலாக போராளிகள் என குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், பிபிசி இந்தியாவின் இந்திய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் பிபிசி இந்தியாவின் செய்திகள் மற்றும் உள்ளடக்கங்களை வெளியுறவு அமைச்சகம் உண்ணிப்பாக கண்காணிக்கும் எனவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கும், பிபிசி இந்தியா நிறுவனத்திற்கும் இடையே உரசல் போக்கு நீடித்தது. இதனை அடுத்து பிபிசி இந்திய நிறுவனத்தில் வருமான வரி சோதனையும் நடைபெற்றது.
இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக செய்தி வெளியிட்ட பிபிசி இந்தியா நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.