சென்னை: தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உழவுத் தொழில் வேறு தொழில் செய்பவர்களுக்கு எல்லாம் உணவளித்துத் தாங்குவதால் உழவர்கள் உலகம் என்னும் தேருக்கு அச்சாணி போன்றவர்கள் என்கிறார் திருவள்ளுவர். தமிழ்நாட்டில் சாதாரண நெல் குவிண்டால் 2,265 ரூபாய்க்கும், சன்ன ரக நெல் 2,310 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே செல்லும் சாகுபடி செலவின் அடிப்படையில், தற்போதைய நெல் கொள்முதல் விலை என்பது மிக மிகக் குறைவு.
அதிக மகசூல் கிடைத்தாலும், இலாபம் கிடைப்பதில்லை என்ற அவல நிலை நிலவுகிறது. எனவே, நெல் கொள்முதல் விலையை குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டுமென்பது விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 3,100 ரூபாயாக உயர்த்தியுள்ள நிலையில், குறைந்தபட்சம் இந்த அளவுக்காவது கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பின்தங்கிய மாநிலமான ஒடிசாவிலேயே இந்த அளவுக்கு நெல் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது என்றால், தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கு எது தடையாக உள்ளது. என்று புரியவில்லை. நெல் கொள்முதல் விலையை உயர்த்த அரசு தொடர்ந்து தயக்கம் காட்டுமேயானால், உழவுத் தொழிலையே கைவிடும் அளவுக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள். “உழவுத் தொழில் நின்றுவிட்டால் எல்லா ஆசைகளையும் துறந்து விட்டோம் என்கிற துறவிகளுக்கும் வாழ வழியில்லை” என்ற திருக்குறள் தான் நினைவிற்கு வருகிறது.
முதலமைச்சர் இதில் உடனடிக் கவனம் செலுத்தி, வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, நெல் கொள்முதல் விலையை உடனடியாக குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாய் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.