நெல்லை: நெல்லை டவுனில் உள்ள பிரபல தனியார் பீடி கம்பெனி தலைமை அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ஒரு பிரபல பீடி கம்பெனிக்கான தலைமை அலுவலகம் நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த பீடி கம்பெனியின் சார்பில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பீடி கம்பெனியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மத்திய போலீஸ் பாதுகாப்புடன் நுழைந்த வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
வருமானத்துறையினர் அலுவலகத்தின் அனைத்து கதவுகளையும் மூடிய பின் ஊழியர்கள் அனைவரின் செல்போன்களையும் பெற்றுக் கொண்டு அங்குள்ள ஆவணங்களை சரிபார்க்கத் தொடங்கினர். இந்த சோதனையில் ஆவணங்களில் கோரப்பட்டுள்ள பண விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. வருமான வரி முறையாக செலுத்தி உள்ளார்களா? என்பது குறித்தும், பீடி உற்பத்தி மூலம் கிடைத்த வருவாயை கணக்கிட்டும் இச்சோதனை நடந்தது.