திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டி கொலை செய்த வழக்கில், பெட்ரோல் பங்கில் சண்டை போட்ட சிசிடிவி பதிவை வெளியிட்டதால் வெட்டி கொன்றோம் என கைதான 4 வாலிபர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (50). இவர் கூவத்தூர் அடுத்த உள்ள காத்தான்கடை இசிஆர் சாலை அருகே பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 29ம் தேதி இரவு இவர் தனது பெட்ரோல் பங்கிற்கு வந்து பைக்கில் மீண்டும் வீடு திரும்பும் வழியில், மறைவான இருள் சூழ்ந்த இடத்தில் திடீரென வேகமாக வந்த ஒரு கார், மோகன்ராஜியின் பைக்கை இடைமறித்து நின்றுள்ளது. அந்த காரிலிருந்து இறங்கி வந்த மர்ம நபர்கள் கத்தியால் மோகன்ராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
தகவலறிந்த கூவத்தூர் போலீசார் தலை மற்றும் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடி, துடித்த மோகன்ராஜை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மோகன்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்த நிலையில் கூவத்தூர் நாவக்கால் பகுதியை சேர்ந்த ரகு (32), தட்சணாமூர்த்தி (26), ரவீந்திரன் (27), கதிர்வேல் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ரகு உள்ளிட்ட சிலர் கடந்த மாதம் மோகன்ராஜியின் பெட்ரோல் பங்கிற்கு வந்து பெட்ரோல் போடும் போது, அதே பங்கில் பெட்ரோல் போட வந்த வேறு ஒருவருடன் வாக்குவாதம் மற்றும் அடிதடி ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை சம்மந்தப்பட்ட சிசிடிவி பதிவுகளை பங்க் உரிமையாளர் மோகன்ராஜ் ரகுவின் எதிர் தரப்பினரிடம் கொடுத்ததாகவும், அந்த பதிவுகளை எதிர்தரப்பினர் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவ செய்ததால் மன உலைச்சல் ஏற்பட்டதாகவும் அதனால் தான் மோகன்ராஜியை நாங்கள் கொலை செய்தோம்’ கூறினர்.