திருமலை: வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் இடமாற்ற உத்தரவுப்படி திருப்பதி தேவஸ்தான கல்லூரி பெண் முதல்வர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வரும் வேற்று மதத்தை ேசர்ந்தவர்களை வேறு துறை பணிகளுக்கு மாற்றப்படுவார்கள் என ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு தெரிவித்திருந்தார். அதன்படி திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு மாநில அரசிடம் சில நாட்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் தேவஸ்தான கட்டுப்பாட்டில் இயங்கிவரும் திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வராக அசுந்தா என்பவர் பணிபுரிந்து வந்தார். அவரை அந்த பணியில் இருந்து விடுவித்து அதற்கு பதிலாக நரசிங்கபுரத்தில் உள்ள தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை திருப்பதி தேவஸ்தானம் நேற்று முன்தினம் வழங்கியது.
ஆந்திர அரசு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் முதல் நபராக அசுந்தா மாற்றப்பட்டுள்ளார். வேற்று மதத்தை சேர்ந்த அசுந்தா, கல்லூரியில் வாராந்திர பூஜைகள் செய்ய யாரையும் அனுமதிப்பதில்லை என்றும், அவ்வாறு பூஜை நடந்தாலும் அதில் பங்கேற்காமல் விலகி வந்ததாகவும், குறிப்பாக பிரசாதங்களை புறக்கணித்து வந்ததாகவும் அவர் மீது பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.