சென்னை: குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கு சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015-ல் தொடரப்பட்ட பொதுநல வழக்கை வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து 2016 முதல் விசாரித்து வந்தது. வி.வி.மினரல், டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட், பீச் சேண்ட் மைனிங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தாதுமணல் எடுக்க 7 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு தொழில் துறை பதில் மனு தாக்கல் செய்தது.
சட்டவிரோதமாக தாது மணல் எடுப்பதாக வந்த புகாரை அடுத்து 2013ல் தடை விதிப்பு என ஐகோர்ட்டில் அரசு தகவல் தெரிவித்தது. தடைக்கு முன்பும், தடைக்கு பிறகும் சட்டவிரோதமாக தாது மணல் எடுத்ததால் ஏற்பட்ட ரூ.5,832 கோடி இழப்பு ஏற்பட்டது. இழப்பீட்டு தொகையை தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடம் இருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் வசம் உள்ள 1.55 கோடி டன் தாது மணலை பறிமுதல் செய்து ஒன்றிய அரசிடம் ஒப்படைக்க முடிவு என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
3 மாவட்டங்களிலும் 234 ஹெக்டேரில் 1.01 கோடி டன் தாது மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டது என சிறப்புக் குழு அறிக்கை தாக்கல் செய்தது. 2018 2022 வரை சுமார் 16 லட்சம் டன் அளவிலான தாது மணல் சட்ட விரோதமாக கடத்தப்பட்டது. சுமார் 6,449 டன் அளவிலான மோனோசைட் என்ற கனிமங்களும் கடத்தப்பட்டதாக சிறப்புக் குழு அறிக்கை தாக்கல் செய்தது. சட்ட விரோதமாக தாது மணல் அள்ளியதாக 6 கனிமவள நிறுவனங்களுக்கு நெல்லை ஆட்சியர் கடந்த டிசம்பரில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வி.வி.மினரல்ஸ் உட்பட 6 நிறுவனங்கள் அரசுக்கு ரூ.3,528 கோடி உரிமைத் தொகை செலுத்த நெல்லை ஆட்சியர் உத்தரவிட்டார். வி.வி.மினரல்ஸ் மட்டும் 2002 2014 வரை நெல்லையில் 27 லட்சம் டன் கனிமங்களை சட்டவிரோதமாக எடுத்ததாக புகார் கூறினார். ராயல்டி, கனிமவள கட்டணமாக வி.வி.மினரல்ஸ் ரூ.2,195 கோடி செலுத்த நெல்லை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தென்மாவட்ட கடலோரப் பகுதிகளில் விதிகளை மீறி தாதுமணல் அள்ளிய புகார்களை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வி.வி. மினரல்ஸ், ட்ரான்ஸ் வேர்ட்ல் கார்னெட், பீச் அண்டு மைனிங் உள்ளிட்ட 7 நிறுவனங்களுக்கு எதிரான புகாரில், சிறப்பு புலனாய்வுக் குழு அளித்த அறிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தாது மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும். மோனோசைட் தாது பிரித்தெடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் செல்லும். இதில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் குறித்தும் விசாரிக்க வேண்டும். பதுக்கி வைக்கப்பட்டுள்ள மணலை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தனியார் நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு தெரிவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது.
தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் உரிமைத் தொகை ரூ.5,832 கோடியை நிறுவனங்களிடம் வசூலிக்க வேண்டும். சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாதுமணலை உடனடியாக ஒன்றிய அரசிடம் ஒப்படைக்க அனுமதி வழங்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட தாதுமணலுக்கான தொகை மற்றும் ராயல்டி தொகையை தனியார் நிறுவனங்களிடம் வசூலிக்க வேண்டும். ரூ.1000 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு என்பதால் அந்நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.