சென்னை: பேச்சாற்றல், எழுத்தாற்றல், சிந்தனையாற்றல் என்ற 3 பெரும் உபகரணங்களால் மறுமலர்ச்சி சிந்தனையை விதைத்தவர் அண்ணா என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அண்ணாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் இயல்பாகவே மிகவும் எளிமையானவர், பழகுவதற்கு இனிமையானவர். மற்றவர் மனம் புண்படக்கூடாது என்பதில் எப்போதும் விழிப்பாக இருப்பார். ஆத்திரமூட்டும் வகையில் விமர்சிப்பவர்களையும் சிரித்த முகத்துடன் அணுகக்கூடியவர்.
அவரின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பல்வேறு வகையில் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆங்காங்கே உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பேச்சாற்றல், எழுத்தாற்றல், சிந்தனையாற்றல் என்ற மூன்று பெரும் உபகரணங்களால் மறுமலர்ச்சிச் சிந்தனையை தமிழ்நாட்டில் விதைத்த முன்னோடி. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்கிற மூன்று சொற்களை மந்திரம் போல இளைஞர்களின் மனதுக்குப் பழக்கிய ஆசான். தன் கொள்கைப் பிடிப்பால் இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வதில் மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.