சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் எம்எல்ஏ, சென்னையில் சசிகலாவை நேற்று திடீரென சந்தித்து பேசினார். அதிமுகவை கைப்பற்றும் நோக்கில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தனித்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜேசிடி பிரபாகரன் ஆகியோரும் செயல்பட்டு வருகின்றனர்.இதற்கிடையில் ஓபிஎஸ் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ கடந்த 29ம் தேதி சென்னை அடையாறில் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்நிலையில் வைத்திலிங்கம் எம்எல்ஏ நேற்று சென்னையில் சசிகலாவை சந்தித்தார். இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது பற்றி வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் கூறுகையில்:
வைத்திலிங்கம் மகன் திருமணம் வரும் 7ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது. இதற்கான திருமண அழைப்பிதழ் சசிகலாவுக்கு கொடுக்கத்தான் இந்த சந்திப்பு நடைபெற்றது. திருமணத்துக்கு சசிகலா வருவதாக உறுதி அளித்துள்ளார். அப்போது ஓ.பன்னீர்செல்வமும் திருமணத்துக்கு வருவார். அங்கு சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்’’ என்றனர். அதிமுகவை மீட்க ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.